இந்திய அணியுடன் இந்தியாவில் நடந்துவரும் ஒருநாள் போட்டிகளில் கோட்டைவிடும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மதுச்சாலைகளில் விடிய விடிய தமது நேரத்தைச் செலவு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின்னர் அவர்கள் எங்கு சென்றாலும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. இப்போது இந்தியா கொல்கத்தாவிலும் அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல் மற்றும் போட்டி நடக்கும் ஈடன்கார்டன் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நள்ளிரவில் கேளிக்கைக் கூடங்களுக்குச் சென்று குடித்து கும்மாளமிட்டுவிட்டு திரும்பியது தெரியவந்துள்ளது.
இலங்கை அணியின் மூத்த வீரர் சனத் ஜெயசூர்யா, திலகரட்ண டில்ஷான் உள்பட 7 வீரர்கள் கடந்த செவ்வாய்கிழமை இரவு 11 மணி அளவில் போலீசுக்கு தெரிவிக்காமல் எந்த பாதுகாப்பும் இன்றி ஹோட்டலை விட்டு கிளம்பி உள்ளனர். இதில் 5 பேர் சீக்கிரம் திரும்பி விட்டனராம். ஆனால் ஜெயசூர்யாவும், டில்ஷானும் தமது கேளிக்கைகளில் மெய்மறந்து இருந்து விட்டு அதிகாலை 2 மணிக்கு தான் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார்கள். எனவே இது போலீசாருக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் கூறும் போது, `இது பாதுகாப்பு தவறு தான். அதற்கு காரணம் நாங்கள் அல்ல. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தான். ஹோட்டலை விட்டு வெளியே சொல்லக்கூடாது என்று இலங்கை அணி வீரர்களுக்கு நாங்கள் தெளிவாக சொல்லி இருக்கிறோம். அப்படி இருந்தும் அவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறி நடந்துள்ளனர். மேலும் மீண்டும் இது போன்று நடக்கக்கூடாது என்று இரு அணியினரையும் அறிவுறுத்தி இருக்கிறோம்' என்றார்.
2 comments:
eppadi
nice >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Post a Comment