Pages

08 May 2009

மகிந்த வெறும் நடிகரே, அதன் இயக்குனர்கள் இந்தியாவே – சீமான்


தமிழ் ஈழ ஆதரவு இயக்கத்தின் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்தது. திரைப்பட இக்குனர்களான ஆர்.கே.செல்வமணி, சிவா, சிபிசந்தர், சிபி, கவுதமன், கவிஞர் அறிவுமதி மற்றும் பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் துரை.சம்பத், செயலாளர் ரவணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய இயக்குனர் சீமான் ''சிங்கள ஜனாதிபதி ராஜபக்ச ஒரு நடிகர் மட்டும் தான். இங்கு இருந்து தான் அவரை இயக்கம் செய்கிறார்கள். தமிழகத்தில் எங்களை சந்திக்க சோனியாகாந்தியால் முடியவில்லை. அதனால் தான் இங்கு பிரச்சாரத்திற்கு வரவில்லை.ஈழத்தமிழருக்காக நம் தேசத்தில் இவ்வளவு பெரிய போராட்டம் நடந்து வருகிறது.

இப்பிரச்சினைக்காக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி எந்த வருத்தமும் இதுவரை தெரிவிக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு கொண்டு இருக்கின்றனர். இங்கு இறந்த வீட்டில் வந்து நீங்கள் ஓட்டு கேட்கிறீர்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாது. நீங்கள் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி வைத்து அப்பாவி தமிழர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்ததை தமிழர்கள் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் ரூ.2 ஆயிரம் கோடி பணம் செலவு செய்ய இருக்கின்றனர். ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். அந்த பணம் உங்களுடையது.

ஆனால் காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள். அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுங்கள். பணமா? தமிழ் இனமா? என்பது தான் இந்த தேர்தல்.நமக்கு முதல் எதிரி சிங்களர்கள். 2-வது எதிரி காங்கிரஸ் கட்சியினர்.

அவர்கள் ஆட்சி அதிகாரத்தை பறிக்க வேண்டிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து இருக்கிறது. எனவே இந்த முறை தேர்தலில் 90 முதல் 95 சதவீதம் வரை ஓட்டு பதிவாக வேண்டும். அவை அ.தி.மு.க.விற்கு சேர வேண்டும்.நம் ரத்த சொந்தங்களுக்கு அ.தி.மு.க. கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழ் ஈழம் அமைத்து தருவார். அதற்கு நாம் இந்த தேர்தலுக்கு பின் அவருக்கு இ-மெயில் மற்றும் பேக்ஸ் மூலம் நன்றி தெரிவிக்க வேண்டும்''என்று பேசினார்.

அ.தி.மு.க.,கூட்டணிக்கு இயக்குநர் சீமான் கெடு..!
திருநெல்வேலி : தேர்தலுக்கு பிறகு இலங்கை ஆதரவு நிலைப்பாட்டி மாற்றிக்கொண்டால் சட்டசபை தேர்தலில்மண்ணை கவ்வ வைப்போம் என தென்காசியில் இயக்குநர் சீமான் பேசினார். திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளில் எதிர்பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றனர். தென்காசியில் நடந்த கூட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக இயக்குநர்கள் சீமான், செல்வமணி, சிவா, சிபி ஆகியோர் பேசினர். சீமான் பேசுகையில், தமிழ் ஈழம்தான் இலங்கை தமிழர்களின் விடுதலைக்கான ஒரே தீர்வு. இதனை ஆதரிக்கும் எந்த சக்தியையும் நாங்கள் ஆதரிப்போம். இலங்கை பிரச்னையை கையில் எடுக்க மாநில கட்சிகள் தயங்கிய போது இந்திய கம்யூ.,தான் முதன்முதலில் குரல் கொடுத்தது. இலங்கையில் தவிக்கும் தமிழர்களின் தற்போதைய தேவை உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம்தான். தமிழக மீனவர்கள் 450 பேரை இலங்கை ராணுவத்தினர் கொன்றபோது இந்திய ராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லையே என கேட்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்கிறார்கள். இலங்கை தமிழர் பிரச்னையில் ராணுவத்தால் தீர்வு ஏற்படுத்த முடியாது என கூறும் மத்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி, ரேடார் கருவிகள், போர்ப்பயிற்சி ஆகியவற்றை வழங்குவது ஏன் இவ்வாறு சீமான் பேசினார். அவர் பேசும்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர், இப்போது இலங்கை தமிழருக்கு ஆதரவு என கூறி ஓட்டுக்களை பெறும் கட்சிகள் தேர்தலுக்கு பின்னர் இலங்கை தமிழர் பிரச்னையை கண்டுகொள்ளாமல் போனால் என்ன செய்வது என சத்தமாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், அடுத்ததாக வரும் சட்டசபைதேர்தலில் அவர்களை மண்ணை கவ்வ வைப்போம் என்றார்.

No comments:

Post a Comment