Pages

21 April 2009

புலிகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கருணாநிதியிடம் பழ.நெடுமாறன் வேண்டுகோள்

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க தமிழக முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"பிரபாகரன் தீவிரவாதி அல்ல, அவர் எனது நண்பர். புலிகள் இயக்கத்தின் இலட்சியங்கள் உன்னதமானவை. தமிழீழம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் போராடி வருகின்றனர்' என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதை வரவேற்கிறேன்.

புலிகள் குறித்தும், பிரபாகரன் குறித்தும் அவர் முன்னர் வெளியிட்ட கருத்தை இதன் மூலம் மாற்றிக் கொண்டுள்ளார்.

புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அதை ரத்து செய்யும் வகையில், தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றினை முதல்வர் கருணாநிதி கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளுமே இத்தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முன் வருவார்கள்.

எனவே இதற்கான முயற்சிகளை முதல்வர் கருணாநிதி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

No comments:

Post a Comment