தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கப் படையினருக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்று வரும் இறுதிக் கட்டப் போராட்டம் காரணமாக சிறுவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படக் கூடுமென யுனிசெப் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.
அரசாங்கப் படையினர் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதன் காரணமாகவும், புலிகள் பொதுமக்களை தடுத்து வைத்திருப்பதனாலும் சிறுவர்கள் உயிரிழக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த யுத்தம் காரணமாக கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்வடையக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
"மோதல்கள் தொடர்ந்து இடம்பெறுமயின் , விடுதலை புலிகள் பொதுமக்களை மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து வெளியேறுவதைத் தடுத்தால் மேலும் பல சிறுவர்கள் உயிரிழப்பார்கள்" என யுனிசெப்பின் தெற்காசிய வலயத்திற்கான பணிப்பாளர் டானியல் டூல் தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றி குறித்து காட்டும் முனைப்பைவிட சமாதானத்தை வென்றெடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் அதிக அக்கறை காடட் வேண்டுமென யுனிசெப் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் காணப்படும் அகதி முகாம்களில் சன நெரிசல் அதிகரித்துச் செல்வதாகவும், இதனால் அகதிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு தேவையான அடிப்படை நிவாரணங்களை வழங்குவதற்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக யுனிசெப் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment