Pages

21 March 2009

என் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள்தான்: வைகோ


மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த தமிழக அரசை கண்டித்து கோவை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றுக்காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக ஒரு லாரியில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர்,

’’உலக நாடுகள் கொடுக்கும் ஆயுதங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு ஈழ தமிழர்களை அழித்து வரும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து எந்த நாடும் உதவி செய்யாத நிலையிலும் போராடி வரும் விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்பதற்காக நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதே போல எங்களையும் சிறையில் அடைத்து நிராயுதபாணியாக்கி தேர்தலை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நான் பேசினேன். நான் பேசியதை இங்குள்ள நூற்றுக்கணக்கானவர்கள் திருப்பி சொல்லியுள்ளனர். எனவே இவர்கள் அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வீர்களா?

அப்படியென்றால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் சிறைச்சாலை ஆக்குவீர்களா?. தமிழகத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை. தமிழனத்துக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வரக்கூடாது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்குங்கள். அதனை வாங்கி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு அனுப்பலாம்.

ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையினால் மட்டுமே இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய முடியும். ஆனால் அந்த சபையில் தீர்மானம் கொண்டு வர விடாமல் இந்தியா தடுக்கிறது.

புலிகளை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என்று ராஜபக்சே கூறுகிறார். ஆனால் விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது. அவர்களை நெருங்க கூட முடியாது.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இங்கு இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். கோவை மாவட்டத்தில் ம.தி.மு.க. பலவீனமடைந்து விட்டது என்று யாரோ சொல்கிறார்கள். ஆனால் இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

பிள்ளை பிடிக்கிற கூட்டம் போல ஆட்களை பிடிக்கிறார்கள். 1993-ல் எங்களோடு வந்தவர்களுக்கு பதவி தருகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை.

என்னை கள்ளத்தோணியில் சென்று வந்தவன் என்றும், உயிர் பிச்சை கொடுத்ததாகவும் முதல்-அமைச்சர் சொல்கிறார். ஆனால் உண்மையில் என் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான்.

சுற்றி நின்று தாக்குதல் நடத்திய போதிலும் என்னை பாதுகாத்து அனுப்பி வைத்தவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களில் சரத் என்கிற பீட்டர் கென்னடி என்பவரும் ஒருவர். அவருடைய பெயரை தான் நாஞ்சில் சம்பத் தனது மகனுக்கு வைத்துள்ளார்’’ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment