Pages

13 March 2009

கருணாநிதிக்கு இலங்கை தமிழர்கள் குறித்து யாரையும் விமர்சிக்க அருகதை இல்லை: ஜெ.


இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையையே நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு அவர்களின் துன்பத்திற்கு காரணமாகியுள்ள கருணாநிதி என்னுடைய அறிக்கையை நகைச்சுவை என்று கூறி இருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையையே நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு அனைத்துக் கட்சி கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இராஜினாமா கடிதங்களை பெறுதல், இராஜினாமா கடிதங்களை கிழித்து போடுதல், மனித சங்கிலி போராட்டம் என பள்ளிக்குழந்தைகள் உட்பட அனைவரையும் மழையில் நிற்க வைத்து தந்தையும், மகனும் வாகனத்தில் பவனி வருதல், பிரதமருக்கு தந்தி, இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தீர்மானம் என பல்வேறு சிரிப்பு நாடகங்களை அரங்கேற்றி இலங்கைத் தமிழர்களுடைய அழிவிற்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும் இன்னலுக்கும் காரணமாகி உள்ள கருணாநிதி என்னுடைய அறிக்கையை நகைச்சுவை என்று கூறி இருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது

நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றவுடன் ஒரே நாளில் மருந்து களையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து விமானமும் ஏற்பாடு செய்து, அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது சாத்தியமா? என்று தன்னுடைய அறிக்கையில் வினவியிருக்கிறார் முதல்- அமைச்சர் கருணாநிதி.

நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்ற அறிவிப்பு 5-3-09 அன்றே வெளியிடப்பட்டு விட்டது. அதற்கான ஏற்பாடுகளை மூன்று, நான்கு நாட்களில் மத்திய அரசு தாராளாக செய்யலாம். அனைத்தையும் தெரிந்திருந்தும் ஒன்றும் தெரியாதது போல் நடிக்கும் கருணாநிதியை என்ன வென்று சொல்வது?

இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்காக மத்திய அரசு ஆயுதங்களையும், அதி நவீன சாதனங்களையும் அளித்த போதும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளித்த போதும் வாய் திறக்காத கருணாநிதிக்கு இலங்கை தமிழர்கள் குறித்து யாரையும் விமர்சிக்க அருகதை இல்லை என்பதை முதலில் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ, வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எந்தத் தொகையையும் அனுப்ப இயலாது என்ற உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல் நான் அறிக்கை வெளியிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

கருணாநிதியினுடைய அறிக்கையின் வரிகளைக் பார்த்தால் அ.தி.மு.க. சார்பில் திரட்டப்பட்ட நிதி இலங்கைத் தமிழர்களை சென்றடையாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

எனக்கும், அ.தி.மு.க.வுக்கும் எதிராக கருணாநிதி ஏற்படுத்திய எத்தனையோ தடைகளை நான் முறியடித்து இருக்கிறேன். அந்த வகையில், இந்த தடையையும் நான் முறியடிப்பேன் என்பதை கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்வதோடு அ.தி.மு.க. வால் திரட்டப்பட்ட இலங்கை தமிழர்களுக்கான நிதி முறையாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களை சென்றடையும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment