Pages

16 May 2011

ஈழ பிரச்சினை:- மாநில முதல்வரால் ஓரளவுக்குதான் செயல்பட முடியும் – ஜெ

கேள்வி: உலகத் தமிழர்கள் அனைவரும் இன்றைக்கு உங்களிடம் இருந்து ஒரு துணையை, ஒரு பாதுகாப்பை எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, ஈழத் தமிழர்கள். அவர்களுக்கு உங்கள் நம்பிக்கை வார்த்தைகள் என்ன?

பதில்: இலங்கை தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆள்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதைப் பற்றி பல பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பல அறிக்கைகளையும் வெளியிட்டு இருக்கிறேன். அந்த துயரங்களுக்கு காரணம் இலங்கை அரசுதான்.

ஆகவே தமிழர்கள் என்ற முறையில், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டியது, நம் அனைவருடைய கடமை. இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதற்கு நம்மால் முயன்றதை அனைவரும் செய்ய வேண்டும்.

மாநில முதல்வர் என்ற முறையில் ஓரளவுக்குத்தான் இதில் செயல்பட முடியும். ஏனென்றால் இது சர்வதேச பிரச்சினை. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை. நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான்.
மத்திய அரசு இதில் என்ன செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நான் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துவேன்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்திய அரசு 2 வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று, இனப் படுகொலைக்காக, போர் குற்றங்களுக்காக, இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு கவுரவமான வாழ்க்கையை, கண்ணியமான வாழ்க்கையை அளிக்க இலங்கை அரசை வற்புறுத்துவதற்காக, இலங்கை அரசு பணியவில்லை என்றால், அந்நாட்டுக்கு எதிரான பொருளாதார தடைகள் கொண்டுவர இந்தியா மற்ற நாடுகளுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதைச் செய்தால் நிச்சயமாக இலங்கை அதிபர் பணிந்தாக வேண்டும். இலங்கை அரசு பணிந்தாக வேண்டும். பிரச்சினை தீரும்,” என்றார்.

No comments:

Post a Comment