Pages

26 May 2009

போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி பூஜை

சேலம் அருகே மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் குறைய வேண்டி போலீசார் கிடா வெட்டி பூஜை செய்தனர்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்குகள் அதிகளவில் பதிவாகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தற்கொலை தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிணற்றில் விழுந்து மூதாட்டி சாவு, சர்க்கரை வியாதி அவதியால் பெரியவர் தூக்கிட்டு சாவு, தறி தொழிலாளி தற்கொலை, திருமணமாகி ஒன்றரை வருடத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை என தொடர்ந்து தற்கொலை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், பிணத்தை கைப்பற்றுதல், பிரேதப் பரிசோதனை, வழக்கு விசாரணை, நீதிமன்றம் என போலீசார் கடுமையாக அலைந்து நொந்து போயினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அமாவாசை தினத்தில் கிருத்திகையும் வந்ததால், சிறப்பு பூஜை செய்ய தீர்மானித்தனர். தற்கொலை வழக்குகள் குறைய வேண்டி போலீஸ் ஸ்டேஷன் முன் கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த பூஜையில் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

பூஜையின் போது இனிமேலாவது கொலை வழக்குகள் குறைய வேண்டும் என்று போலீசார் நெஞ்சுருக வேண்டிக் கொண்டனர். பூஜைக்கு பிறகு கிடா கறியை போலீசார் பகிர்ந்து கொண்டனர்.

போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி பூஜை செய்த சம்பவம் சரக போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment