
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
2007-2008 ஆம் ஆண்டிற்கு 'சி' மற்றும் 'டி' பிரிவு அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ.2,500 உச்ச வரம்புக்குட்பட்டு போனஸ் வழங்கிடவும், 'ஏ மற்றும் பி' பிரிவு அலுவலர்களுக்கு ரூ.1000 சிறப்பு போனஸ் வழங்கிடவும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.300 வழங்கிடவும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதிநேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் வரையறுக்கப்படாத ஊதிய விகிதத்தில் பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள் மற்றும் குறைந்தது 240 நாட்கள் அல்லது அதற்கு மேலும் தினக்கூலி பெற்று பின்னர் நிரந்தரப் பணியாளர்களாகவும் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் ரூ.1000 வழங்கப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில் கல்விக்குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் ஊதிய விகிதங்களின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.253 கோடி செலவாகும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment