Pages

25 June 2009

'வணங்காமண்' நிவாரணப்பொருட்கள் செ.சங்கம் மூலம் வன்னிக்கு எடுத்து செல்லப்படும்: முதல்வர் கருணாநிதி நடவடிக்கையால் இலங்கை அரசு அனுமதி

வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப்பொருட்கள் இன்னும் சில தினங்களில் வன்னியில் உள்ள தமிழ் மக்களுக்கு வழங்க செஞ்சிலுவைச் சங்க மூலம் எடுத்து செல்லப்படும் என இன்று டில்லியில் இலங்கை-இந்திய அதிகாரிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வணங்காமண், உலகத் தமிழர்களின், குறிப்பாய் ஐரோப்பிய தமிழர்களின் கொடை மூலம் 884 மெட்ரிக் தொன் எடை கொண்ட உணவுப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை சுமந்து கொழும்பு நோக்கி சென்றது. கொழும்பில் இலங்கைக் கப்பற்படை நான்கு நாட்கள் சோதனையிட்டு, உணவு மற்றும் மருந்து பொருட்கள் மட்டுமே உள்ளதாய் அறிக்கையையும் வெளியிட்டது. பின்னர் இலங்கை அரசு அற்ப காரணங்களை கூறி பொருட்களை இறக்க தடை விதித்து கப்பலையும் வெளியேறுமாறு கட்டளையிட்டது.

வணங்காமண் சென்னை கடல் பகுதியை நோக்கி கடந்த 12ம் தேதி கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையே தமிழக முதல்வர் கருணாநிதி அதிரடியாய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு கடிதம் மூலம், கப்பலில் உள்ள பொருட்களை வன்னி மக்களுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என கடிதம் எழுதினார்.

கால அவசரம் கருதி, இக்கடிதத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதத்தை எடுத்து டெல்லி சென்று, கிருஷ்ணாவை சந்தித்து கையளித்தார். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சரும் சாதகமான பதில் கிடைக்க செய்வேன் என உறுதியளித்திருந்தார்.

ஆனால் இந்திய கப்பற்படை அதிகாரிகள் வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியது என சென்னை துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்தனர். இதன் காரணமாக துறைமுக அதிகாரிகள் கப்பலை சில கடல் மைல் கப்பலை நகர்த்தி வைக்க கட்டளை பிறப்பித்தனர்.

கப்பலில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்தோடு பணியாளர் சிலருக்கு உடல் நலக்குறைவும் எற்பட்டது. உடனடியாய் சென்னை துறைமுக கூட்டுத்தாபனம் குடிதண்ணீர் வழங்கியது.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணா இன்று இலங்கையின் மேல் மட்ட அதிகாரிகளுடன் வணங்காமண் குறித்து கலந்துரையாடப்படும் என அறிவித்தார்.

இலங்கையிலிருந்து மேல் மட்ட அதிகாரிகளாக அந்நாட்டின் அதிபர் ராஜபக்சவின் இரண்டு சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் தலைமையில் மதியம் டெல்லி வந்து சேர்ந்தனர். இந்தியாவின் சார்பாக இந்தியாவின் பாதுகாப்புச் செயலர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, திமுகவின் மத்திய அமைச்சர் ராசா தலைமையில் இன்று மதியம் மற்ற திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து வணங்காமண் திரும்பவும் வன்னி மக்களுக்கு சேர வேண்டும் என அழுத்தம் கொடுத்தார்.

இரு நாட்டு அதிகாரிகள் குழு கூட்டத்தில் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். கூட்டத்தின் முதலிலேயே வணங்காமண் கப்பல் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்களை கொண்டு சேர்ப்பது குறித்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கு இலங்கை அதிகாரிகள் குழு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உடனடியாய் சம்மதம் தெரிவித்தது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.எம். கிருஷ்ணா நிவாரண கப்பலை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுமதிக்க இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலம் பொருட்களை எடுத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை தற்போது சென்னையிலோ அல்லது தூத்துக்குடி துறைமுகத்திலோ இறக்கப்பட்டு, சில தினங்களில் வன்னியில் உள்ள தமிழ் உறவுகளுக்கு சென்று சேர உள்ளது

No comments:

Post a Comment